×

நீலகிரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனி; மைனஸ் டிகிரிக்கு சென்ற வெப்பநிலை: முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் அவதி

ஊட்டி:  நீலகிரியில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்திருந்த நிலையில் அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றது. மேலும், பனிப்பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் நீர் பனி விழும். நவம்பர் மாதம் இறுதி வாரம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரையிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் உறை பனி விழும். ஆனால், இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் முதல் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சில நாட்கள் பெய்த மழையால் சில நாட்கள் பனிப்பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் இறுதி வாரம் முதல் மீண்டும் நீர் பனியின் தாக்கம் அதிகரித்தது. மேலும் பனிப்பொழிவு அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருக துவங்கின. தேயிலை, மலை காய்கறிகள் மற்றும் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் சேதமடையாத வகையில் புல் மைதானத்திற்கு காலையில் பாப்-அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீலகிரியில் உறை பனி தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், 3வது நாளாக நேற்று முன்தினமும் உறை பனி கொட்டியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை அதிகபட்ச வெப்ப நிலை 23 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. அவலாஞ்சி, அப்பர்பவானி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் மைனஸ் 1 முதல் 2 டிகிரி செல்சியசிற்கு சென்றது. இதனால், அப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியிருந்தன. வீடுகளின் வெளியே பாத்திரங்களில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறின.  

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங் மட்டம், கேத்தி பாலாடா போன்ற பகுதிகளில் உறை பனி கொட்டி கிடந்தது. இதனால், புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தது போல காட்சியளித்தது. விவசாய நிலங்களில் உறை பனி படர்ந்து காணப்பட்டது. உறை பனி விழுந்த நிலையில், நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. நாளுக்கு நாள் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டுகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும், நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் உள்ளது. மேலும், பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Nilgiris , Day by day increasing frost in Nilgiris; The temperature went to minus degrees: people suffered from rashes on the face, hands and feet
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...