×

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உணவுகளின் தரத்தை கண்டறிய நடமாடும் பகுப்பாய்வக வாகனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: உணவுகளின் தரத்தை கண்டறியும் வகையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவு பொருட்களின் தரத்தை கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் 6 உணவு பகுப்பாய்வு கூடங்கள் சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூரில் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 34,980 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 2266 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றதாகவும், 7405 உணவு மாதிரிகள் தரமற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 6542 வழக்குகள் தொடரப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1264 வழக்குகள் தொடரப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ரூ.2.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி கோவை, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடங்கள் ரூ.1.92 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள 2 வாகனம் உள்பட 4 நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பகுப்பாய்வக வாகனங்களில் 30 வகையான உணவு பொருட்களில் கலப்படங்களை கண்டறியும் வகையில் வசதிகள் மற்றும் கலப்படம் குறித்த விளக்கப்படங்களும் உள்ளது. மேலும், இந்த வாகனங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் மூலம் பொது மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

புகார் தெரிவிப்பதற்கென்று 104 என்ற எண் உள்ளது. உணவு தர குறைபாடு குறித்து பொதுமக்கள் புகைப்படத்துடன் உணவு பாதுகாப்பு துறைக்கு 94440 42322 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம்,  உணவு பாதுகாப்புத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் தேவபார்த்தசாரதி  மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Minister ,M. Subrahmanian ,Omanturar Government Hospital , Minister M.Subramanian launched mobile food quality testing vehicle at Omanturar Government Hospital campus
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...