×

ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து களம்காண தயாராகும் அதிமுக, பாஜக: இரட்டை இலையை முடக்க ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பாணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில் எடப்பாடி அணியும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இதனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியை காலியானதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழக தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும். அதன்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனவே மக்கள் மத்தியில் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இதை கவுரவ பிரச்னையாக எடுத்துள்ளனர். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் மாணவர் அணி செயலாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 தேர்தலுக்கு முன்பு 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து 2 முறை அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஆனாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் யுவராஜா கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

அதிமுக தலைவர்கள் இந்த தொகுதியில் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேநேரத்தில் தமாகாவுக்குப் பதில் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வே நேரடியாக போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்குதொகுதி மாநகராட்சி மற்றும் சில கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். கடந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானி சாகர், பெருந்துறை, பவானி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சி தொகுதியில் கூட்டணி கட்சியான பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனது கொங்கு பகுதி செல்வாக்கை காட்ட அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இதனால், ஈரோடு நகரச் செயலாளர் கே.வி.ராமலிங்கத்தை இரு நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வரவழைத்து விசாரித்துள்ளார். இது குறித்து செங்கோட்டையனுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் நகரச் செயலாளரை வேட்பாளராக நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முன்னாள் மேயர் கே.சி.பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர். ஈரோடு நகரத்தில் மட்டும் 3 கோஷ்டிகள் உள்ளன. இதனால் இந்த கோஷ்டி சண்டையை மீறி அதிமுக வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. அ.தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவர்களை எதிர்க்க தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க. கோட்டை அல்ல அது தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என்று திமுகவினர் கூறி வருகின்றனர்.

இதனால் இந்த இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பா.ஜனதாவும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்று கூறி வருகிறது. இங்கு தான் பா.ஜனதாவுக்கு 2 பெண் எம்.எல்.ஏக்கள் (வானதி சீனிவாசன், சரஸ்வதி) உள்ளனர். மேலும் புத்தாண்டு அன்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டார். அதில் கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க., தனித்துப்போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில் மீண்டும் இதை செய்ய தயங்காது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பா.ஜனதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், பாஜகவால்தான் அதிமுக தோற்றது என்று குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் சில அ.தி.மு.க.வினரும் பா.ஜனதாவினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது.

எனவே அதற்கு முன்னோட்டமாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள தங்களது செல்வாக்கை நிரூபிக்கவும் சரியான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த பா.ஜனதா தனித்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் எடப்பாடி அணிக்கு்தான் செல்வாக்கு அதிகம். ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி என்று அறிவித்தால், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து இரட்டை இலையை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய அணி சார்பில் போட்டியிடாமல் பாஜகவுக்கு ஆதரவு என்றும் பாஜக போட்டியிட வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கூறிவருகிறாராம். இதுவும் எடப்பாடி அணிக்கு சிக்கலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் என்ன ஆனாலும் பரவாயில்லை.

அதிமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என்று எடப்பாடி கூறு வருகிறாராம். அதே போல் அதிமுக தன்னிடம்தான் உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமியும், திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது, குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகரித்துள்ளது என்பதை காட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வே நேரடியாக மோதுமா? அல்லது கடந்த தேர்தல் போல் கூட்டணி கட்சிகளுக்கே போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்குமா? பாஜக தனது செல்வாக்கை காட்ட தனித்து போட்டியிடுமா என்பது தேர்தல் தேதி அறிவித்தப்பின் தெரியவரும். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரம் குறித்து உளவுப்பிரிவு போலீசாரும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Adrikhaka ,Bajaka ,Bannerselvam , AIADMK, BJP preparing to contest separately in Erode East: O. Panneerselvam advises to block double leaf
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக...