வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க், உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார். டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார். அதோடு டுவிட்டர் மீது முழு கவனத்தை திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை கொண்டு வந்ததால் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள், தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர். இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை இழந்தார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்த நிலையில், தற்போது 137 பில்லியன் டாலராக (சுமார் ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) இழந்துள்ளார். இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தை சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.