×

மேகதாது, நீதிமன்ற வழக்கு, நீர்பாசன திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம்: பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு

புதுடெல்லி: டெல்லியில் இருந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் கடந்த 22ம் தேதி நடக்கவிருந்த நிலையில், ஆணையத்தின் தலைவர் வரமுடியாத காரணத்தால் கூட்டம் இன்று (ஜூன் 25) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான (பொறுப்பு) மத்திய நீர்வள ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித்துறை  கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் கர்நாடகா, கேரளா, புதுவை மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஆணையத்தின் நிர்வாகப் பணியாளர்கள் தேர்வு மற்றும் காவிரி நீர் தொடர்பாக மதுரை, பெங்களூரு உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேட்டூர் அணை தொடர்பான சரபங்கா நீர்ப்பாசன திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூரு நிதிமன்றத்தில் ஹரங்கி நீர்தேக்கம் தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  மேலும், கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் அங்கீகரிக்கப்படாத நீர்பாசனத்திட்டங்கள், காவிரி கட்டளை – வைகை குண்டூர் திட்டங்கள், மேகதாது திட்டம் குறித்து கர்நாடகா அரசின் அறிவிப்புகள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் 30ம் தேதிக்கு அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் மீண்டும் நடைபெற உள்ளது. தற்போது பருவ மழை பெய்துவரும் நிலையில், மே மாதம் வரை காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் அளவுகள், தரவுகள் போன்றவைகள் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், ஜூன் மாதத்தில் வந்த நீர் தரவுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் மத்திய நீர்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post மேகதாது, நீதிமன்ற வழக்கு, நீர்பாசன திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதம்: பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Cauvery Water Management Authority ,New Delhi ,Delhi ,SK Haldar ,Dinakaran ,
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம் கட்சி...