×

கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பொங்கல் விற்பனைக்கு தயாராகும் குஜிலியம்பாறை மண் பானைகள்

குஜிலியம்பாறை : பொங்கல் பண்டிகை விற்பனைக்கு கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்ப குஜிலியம்பாறையில் மண் பானை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு கிராமப்புற மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் மண் பானை முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற பகுதிகளில் இன்றும் மண் பானையிலேயே வீட்டு பொங்கல் வைத்து வருகின்றனர். இந்நிலையில், குஜிலியம்பாறை அரசு மேல்நிலைபள்ளி சாலையில் உள்ள சாலையூரில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இங்குள்ளவர்கள் அனைவரும் மண் பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தயாரிப்பில் உருவாகும் மண் பானை பொங்கல் பண்டிகை நாட்களில் கரூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு, மண் பானை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சாலையூரை சேர்ந்த சுப்பிரமணி (56) கூறுகையில், ‘கடந்த 3 தலைமுறையாக இத்தொழில் செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே மண் பானை செய்யும் தொழில் உள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே, களிமண்னை கொண்டு வந்து உலர வைத்து அதனை பக்குவபடுத்தி மண் பானை தயார் செய்யும் பணி செய்ய வேண்டி உள்ளது.

நாங்கள் தயாரிக்கும் மண் பானைகள் பொங்கல் பண்டிகை நாட்களில் விற்பனை செய்ய கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் எங்களிடம் வாங்கி செல்கின்றனர். எங்களிடம் ஒரு மண் பானை ரூ.40க்கு குறைந்த விலைக்கு வாங்கி வெளி மார்க்கெட்டில் ஒரு மண் பானையின் விலை ரூ.300 வரைக்கும் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்ய தற்போது உள்ள நிலையில் செலவு அதிகமாகிறது.

ஆனால் அதற்கேற்ப வருவாய் இல்லை. மண் அடுப்பு, மண் பானைகளை பொதுமக்கள் வாங்கி செல்வதில் ஆர்வம் இல்லை. மண் பானை பொருட்கள் குறித்து பொதுமக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லை. பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களை நம்பி மண் பானை தொழில் செய்தால் வருமானம் இல்லாமல் போய்விடும். வெளிமாவட்ட வியாபாரிகளை நம்பியே இத்தொழில் செய்ய வேண்டி உள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மண் பானை விற்பனை மும்முரமாக உள்ளது’ என்றார்.

Tags : Pongal ,Karur ,Tiruppur ,Erode , Gujiliamparai: Preparation of earthen pot at Kujiliyamaparai to send to Karur, Tirupur, Erode districts for Pongal festival sale.
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்