சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னாவின் 216வது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
சித்தூர் காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னாவின் 216வது பிறந்த நாளையொட்டி நேற்று அவரது படத்திற்கு மாவட்ட ஒட்டர் சங்கத்தினர் மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்தனர்.
அப்போது, மாவட்ட ஒட்டர் சங்க பொதுச்செயலாளர் ரவி பேசியதாவது: சுதந்திர போராட்ட தியாகி ஒட்டார ஓபன்னா ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு கிராமமாக சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள் நடத்தி, வெள்ளையனை வெளியேற்ற மக்கள் மத்தியில் சொற்பொழிவு வழங்கினார். ஆங்கிலேயர்கள் பல முறை ஓட்டார ஓபன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சித்தூர் மாநகரத்தில் ஒட்டார ஓபன்னாவுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒட்டார வகுப்பை சேர்ந்தவர்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டார வகுப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஒட்டார வகுப்பை சேர்ந்தவர்களை பிசி வகுப்பில் சேர்த்துள்ளார்கள். எங்கள் கோரிக்கைகளை உடனடியாக முதல்வர் ஜெகன்மோகன் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அப்போது ஒட்டார சங்க கார்ப்பரேஷன் சேர்மன்கள் முருகையா, மனோகர், இளைஞர் அணி தலைவர் ஹரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது.