*பாரம்பரிய உடையணிந்து கொண்டாடினர்
நெல்லை : நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஜாதி, மத பேதமில்லாத தமிழர் திருவிழாவாக கொண்டாடினர். நெல்லை ராணி அண் ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆண்டுதோறும் தமிழர்களின் இன்பத் திருவிழாவான தைப்பொங்கல் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும். கொரோனா சூழல் முழுமையாக விலகிய நிலையில் இந்த ஆண்டு கல்லூரியில் நேற்று பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் கரும்பு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வண்ணக்கோலங்களும் வரைந்திருந்தனர். கல்லூரி முதல்வர் மைதிலி விழாவை தொடங்கி வைத்தார்.
பல்வேறு துறைகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் சார்பில் என மொத்தம் 20 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய புத்தாடை உடையணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பால் பொங்கி வந்தபோது குலவையிட்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து கரகம், கும்மி, மேளம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தினர். இளைஞர்கள் போல் சில மாணவிகள் மாடலாக வந்து அசத்தினர். தமிழர் திருநாள் மதங்களை கடந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளும் பொங்கலிட்டும் ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். குழுவாக செல்பி எடுத்துக் கொண்டனர்.
சர்க்கரை பொங்கல் மட்டுமின்றி வெண்பொங்கல், அதற்கு உரிய காய்கறி கலவை சைடு டிஷ்களையும் மாணவிகள் தயாரித்தனர். பொங்கலிட்டதும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாடு நடத்தி பின்னர் சமத்துவ பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.