×

கொள்ளிடம் அருகே சீரமைக்கப்பட்ட சாலையில் மீண்டும் வெடிப்பு-தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்திலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக மேம்படுத்தப்பட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இந்த சாலையின் வழியே சீர்காழியிலிருந்து பனங்காட்டங்குடி, வடரங்கம், பாலூரான்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியே மாதிரவேளூருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதியதாக அரசு பஸ் விடப்பட்டது.

கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அப்பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும் சென்று கல்வி பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையின் வழியே சென்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்கிறது. இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை இரண்டாக பிளந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் சாலையின் நடுவே மாதிரவேளூர் செல்லும் சாலையில் மீண்டும் வாடி கிராமத்தில் சாலையின் நடுவில் இரண்டாகப் பிளந்ததுபோல் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு வெடிப்பு ஏற்பட்டது. சாலையின் நடுவே திடீரென ஏற்பட்டுள்ள வெடிப்பால் இந்த சாலையின் வழியே செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எந்த நேரமும் இந்த சாலை உடைப்பு ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடத்தில் இருந்து வருகிறது.

சாலையின் பாதுகாப்புக் கருதி அப்பகுதி மக்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்தியும், வலுப்படுத்தியும், மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kollidam , Kollidam: Motorists and public are scared as the repaired road near Kollidam has exploded again.
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...