சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்து பேசுகையில், ‘‘கேரள மாநில அரசு டிஜிட்டல் சர்வே என்ற பெயரில் நமது எல்லைப் பகுதிகளை அளந்து கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து அரசுக்குத் தெரியுமா; ஆராயுமா. நம்முடைய எல்லைப் பகுதிகளான, நம்முடைய தமிழக பகுதிகளை காப்பதற்கு தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘ டிஜிட்டல் சர்வே என்பது, நம்முடைய எல்லை பகுதிகளில் வந்து அளக்க வரும் போது, நம்மிடம் அனுமதி வாங்கி தான் அளக்க வேண்டும் என்று சொல்லி, கேரள அரசாங்கத்திற்கு நாங்கள் கடிதமும் எழுதியிருக்கிறோம். எல்லையில் இருக்கிற கலெக்டர்களுக்கு நாங்கள் எச்சரிக்கை செய்திருக்கிறோம். அவர்கள் அவர்களுடைய பகுதிகளிலே செய்து கொண்டிருக்கின்றனர். நம்முடைய அரசாங்கம், நம்முடைய முதல்வர் பத்திரிகை செய்தி வந்தவுடனேயே, எங்களை அழைத்து, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு, விழிப்போடு, தேனி மாவட்டத்தை மட்டுமல்ல, நம்முடைய எந்த எல்லை பகுதியாக இருந்தாலும், கேரளா எல்லை பகுதியாக சரி, ஆந்திரா எல்லை பகுதியாக இருந்தாலும் சரி, நம்முடைய பகுதியிலிருந்து ஒரு சென்ட் நிலத்தைக்கூட யாருக்கும் விட்டுத் தரமாட்டோம்’’ என்று பதில் அளித்தார்.