திருமலை :தெலங்கானா மாநிலம் சித்திபேட்டையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள்.தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தை சேர்ந்த வெமுலவாடா குடும்பத்தினர், ஸ்ரீராஜராஜேஸ்வர கோயிலில் சுவாமி தரிசனம் சென்று காரில் திரும்பும்போது சித்திப்பேட்டை மாவட்டம் ஜகதேவ்பூர் மண்டலத்தின் முனிகடப்பா கிராமம் மல்லண்ணா கோயில் அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு பெண்கள், குழந்தைகள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.