திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில், வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா நடைபெற உள்ளது. அதையொட்டி, குடியரசு தினத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா, திருவண்ணாமலை ஆர்டிஓ மந்தாகினி, ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது, குடியரசு தினத்தன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்ந்தெடுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தல், போலீஸ் அணிவகுப்பு மரியாதை, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைவாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
மேலும், விழா நடைபெறும் பகுதியில், பார்வையாளர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வகுப்பு நேரம் பாதிக்காத வகையில் கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையை நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.