×

மதுரை திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது: அதிமுக எம்.எல்.ஏ. உதயகுமார் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிறைவேற்றப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக எம்.எல்.ஏ. உதயகுமார் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது பேசிய  அவர், மதுரை திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. திருமங்கலத்தில் முழுமையாக புதிய பாதாள சாக்கடை அமைக்க ரூ.400 கோடி செலவாகும். தொடர்ந்து அதை பராமரிக்க வருவாய் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

இவ்வாண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். மேலும்,  மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என அமைச்சர் கே.என்.நேரு கருத்து தெரிவித்தார். மதுரையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 21 கி.மீ. தூரத்துக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிதி நிலைமைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். சென்னை ஆலந்தூரில் புதிய குடிநீர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags : Madurai Tirumangalam Municipality ,AIADMK ,MLA ,Minister ,KN Nehru ,Udayakumar , Madurai Tirumangalam, Patala Sakakadai, Minister K.N. Nehru
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்