×

கேள்வி நேரத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. புருஷோத்தமன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக திருமங்கலம் அதிமுக உறுப்பினர் உதயகுமார் கேள்விகளை எழுப்பி வருகிறார். அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து வருகிறார். காலை 10 - 11 மணி வரை வினாக்கள், விடைகள் நேரமும், அதற்கு பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல்நாள் விவாதம் தொடங்குகிறது.

ஆரம்பத்தில் திமுக எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் விவாதத்தை தொடங்கி வைப்பார். அதன்பின்னர் அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் தங்களுடைய கருத்துக்களை முன்வைப்பார்கள். இதனிடையே அதிமுக உறுப்பினர்கள் கருப்பு நிற உடையணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நாளையும் இந்த விவாதம் நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பதிலுரை வருகின்ற வெள்ளிக்கிழமை (13ம் தேதி) தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பதில் அளித்து பேசுவார் என்று சட்டமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Appavu , Question Time, Tamil Nadu Legislative Assembly, Speaker Appavu
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...