சென்னை: தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களுக்கு விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்து சட்டம் ஏற்றப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி, கடந்த 2016ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் வரி ஏய்ப்பு செய்தது, இந்த வழக்கில், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ் உள்பட 6 பேரை கடந்த 2016 ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். மேலும், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்தது. இதற்கிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது.
இந்த வழக்கு நேற்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அவர் விடுப்பு என்பதால் 13 ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி மெகப்பூப் அலிகான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தம் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.இதனையடுத்து வழக்கு விசாரணை பிப்.6ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.