வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிற்களில் புகையான் தாக்குதல் அதிகளவு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை முன்கூட்டியே பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அதனை அடுத்து சம்பா சாகுபடி பணிகள் துவங்குவதில் காலதாமதம் இல்லை. இருப்பினும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக விதை விடும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் புழுதி உழவு செய்து நேரடி விதைப்பு செய்வதும் வாய்ப்பில்லாமல் போனது.
வலங்கைமான் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. நடப்பாண்டு 8 ஆயிரத்து 950 ஹெக்டேரில் சம்பாவும், சுமார் நான்காயிரம் எக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டது.முன்னதாக சம்பா சாகுபடிக்கு ஏற்ற கோ51, கோஆர் 50, எம்டியு 7029, சிஆர் 1009, சப் 1 நெல் ரகங்கள் வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர் மற்றும் அரித்துவாரமங்கலம் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
மேலும் இவ்வாண்டு தமிழ்நாடு அரசு பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு அரசு விதை பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா சாகுபடிக்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சடி சம்பா, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி ஆகிய ரகங்கள் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்கம் மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் வேளாண்மை துறையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் இடு பொருளான நெல் நுண்ணூட்டம் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்து வினியோகம் செய்யப்பட்டது.
சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். ஆட்கள் பற்றாக்குறை, நிர்வாகச் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பும், இயந்திர நடவும் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவந்த தொடர் மழையின் காரணமாக அதிகளவில் புழுதி உழவு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போனது, இருப்பினும் பல கிராமங்களில் சேற்று உழவு செய்து நேரடி விதைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று இயந்திர நடவு மேற்கொள்ளும் வகையில் பாய் நாற்றங்கால் மூலம் பல கிராமங்களில் விதை விடப்பட்டு நடவு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்கள் மூலமும் இயந்திர நடவு மேற்கொள்ள முன் பதிவு செய்யப்பட்டும் நடவு மேற்கொள்ளப்பட்டது.டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
மேலும் வலங்கைமான் பகுதியில் வடகிழக்கு பருவமழை குறைவின் காரணமாக சித்தன் வாளூர் நல்லம்பூர் காங்கேய நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை பின்னணிகள் தற்போது ஏற்பட்டுள்ள பருவ மாற்றத்தால் வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நிலங்களில் புகையான் தாக்குதல் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், புகையான் தாக்குதலுக்கு உள்ளான நற்பயிர்களுக்கு தற்போது விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.