குன்னூர் : குன்னூர் ஜெகதளாவில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெற்றது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்து வந்தனர். குன்னூர் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் கலந்துகொண்டு ஹெத்தையம்மன் திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, படுகர் இன மக்கள் வாழும் பேரகணி காட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினர்.