×

பட விழாவில் சமந்தா கண்ணீர்

ஐதராபாத்: புராணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள தெலுங்கு படம் சாகுந்தலம். இதில் சமந்தா சகுந்தலையாக நடிக்கிறார். அவருடன் தேவ்மோகன், மோகன்பாபு, அதிதி பாலன், கவுதமி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். குணசேகர் இயக்கி உள்ளார். வருகிற பிப்ரவரி 17ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சமந்தா கலந்து கொண்டார்.

அரிய வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கடந்த 4 மாதங்களாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் யசோதா திரைப்படம் வெளிவந்தபோது வீட்டுக்குள் இருந்தே படத்தின் புரமோசனுக்கான நேர்காணல் செய்தார். அப்போதுதான் மயோசிடிஸ் நோயால் கஷ்டப்பட்டு வருவதாக கூறி கண்ணீர் சிந்தினார். சமீபத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

4 மாத இடைவெளிக்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் அவரது ரசிகர்கள் அவரை மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். அவருக்கு நம்பிக்கையூட்டும் கோஷங்களை எழுப்பினார்கள். நிகழ்ச்சியில் இயக்குனர் குணசேகர் பேசும்போது, ‘சகுந்தலையாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டபோது தயாரிப்பாளர் நீலிமா, சமந்தாதான் பொருத்தமானவர் என்றார். படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே சமந்தாதான். அவர் இல்லையேல் இந்த படமே இல்லை’ என்றார். இதை கேட்ட சமந்தா நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார்.

பின்னர் சமந்தா பேசும்போது ‘இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித்தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை’ என பேசியபோதும் உணர்ச்சி மிகுதியால் மீண்டும் கண் கலங்கினார் சமந்தா.



Tags : Samantha , Samantha was in tears at the film festival
× RELATED உடல்நிலை பாதித்த என்னை விமர்சித்தனர்: சமந்தா உருக்கம்