நாகர்கோவில்: கணவனை பிரிந்து வாழும் பெண்களை வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து மிரட்டிய வாலிபர் மீது குமரி போலீசில் புகார்கள் குவிந்து வருகிறது. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் மீது குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையை சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர் தக்கலை டிஎஸ்பி அலுவலகம், குமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர். அதில் குழித்துறையை சேர்ந்த பெண், ‘நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன். 2021ல் எனது செல்போனுக்கு வந்த மிஸ்ட் கால் மூலம் மேல்புறம் பகுதியை சேர்ந்த வாலிபர் அறிமுகம் ஆனார். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி பழகினார். அவரது பேச்சில் மயங்கியதில் உல்லாசமாக இருந்தோம். அவற்றை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தார். என்னை திருமணம் செய்வதாக கூறி 15 பவுன் நகைகளையும் வாங்கி சென்றார்.
இந்தநிலையில் அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதுபற்றி கேட்டதற்கு வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். இதனை போன்று இவரது உறவினரான பெண் ஒருவருடனும் பழகி அவரை 2ம் திருமணம் செய்வதாக ஏமாற்றியுள்ளார். நெருங்கி பழகிய நிலையில் மூன்று மாதத்தில் அவரையும் ஏமாற்றியுள்ளார்’ என்று கூறியுள்ளார். குளச்சலை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இதுகுறித்து இந்த பெண் அளித்த புகாரில், ‘கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து எனது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். பேஸ்புக் பக்கத்தில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து அதன் மூலம் வாலிபர் பழகினார். தன்னை இரண்டாம் திருமணம் செய்வதாகவும், குழந்தைகளை பார்த்துக்கொள்வதாகவும் கூறியதால் அவருடன் நெருங்கி பழகினேன்.
அவர் நாங்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோவில் பதிவு செய்தார். எனது நகை, பணத்தை எல்லாம் கொடுத்தேன். அவரது செல்போனை பார்த்தபோது பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள், வீடியோக்கள் அதில் இருந்தன. மேலும் அவற்றை தனித்தனி போல்டரில் பெயர் பதிவு செய்து வைத்துள்ளார். என்ைன திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டாயே என்று கேட்டதற்கு அவர் என்னை மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து உள்ளார். ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் வருவதுபோல், ஒரே நேரத்தில் பல பெண்களை வலையில் வீழ்த்தி அவர்கள் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, தலைமறைவாகி உள்ளார். தற்போது, அந்த வாலிபர் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வாலிபர், மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுவதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.