புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் தொகுதி பாஜ ஆதரவு எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால், மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் இதனை எம்எல்ஏ ஏற்க மறுத்துவிட்டார். தகவலறிந்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.
இதுகுறித்து கவர்னர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கவர்னர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலும் உண்ணாவிரத்தை கைவிடுமாறு எம்எல்ஏவிடம் கேட்டுக்கொண்டேன்.
அதற்குதொகுதி மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவதாக அவர் தெரிவித்தார். எம்எல்ஏவின் கோரிக்கைகளை முதல்வர் ரங்கசாமியிடம் எடுத்துரைத்தேன். முதல்வரும் கோரிக்கைகளை ஏற்று மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பதாகவும், அவரது உடல்நிலை மிக முக்கியம் என்பதாலும் அவரது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை கருதி போராட்டத்தை கைவிடும்படி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.