பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் நெம்மாராவை அடுத்த நெல்லியாம்பதி அரசு ஆரஞ்சு பண்ணையில் ஊடுபயிராக பயிரிடப்பட்டு காலிபிளவர் அறுவடை தொடங்கப்பட்டுள்ளனர்.
நெல்லியாம்பதியில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் டீ, காப்பி தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நெல்லியாம்பதி கைகாட்டியில் அமைந்துள்ள அரசு ஆரஞ்சு பண்ணையில் ஊடு பயிர்களாக காலிபிளவர், கத்திரி, வெண்டை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி ஆகியவை பயிர்செய்து வருகின்றனர்.
இவற்றின் விளைச்சல் காலநிலைகேற்ப அமோகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது இப்பண்ணையில் விளைந்தள்ள காலிபிளவர் அறுவடை நடைபெற்று வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தோட்டங்களிலே விற்பனை நடைபெற்று வருகின்றன. பிரஸ் காய்கறிகள் என்பதால் இங்கு விளையும் காய்கறிகளுக்கு அதிகமவுசு ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நெல்லியாம்பதிக்கு சுற்றுலா வருகின்ற சுற்றுலா பயணிகள் ஆரஞ்சு பண்ணையை சுற்றிபார்க்க வந்தவண்ணம் உள்ளனர்.
இங்குள்ள பண்ணையில் ஆரஞ்சு ஜூஸ், ஆரஞ்சு ஜாம், மற்றும் காய்கறிகளின் இதர பொருட்கள் தயாரித்து விற்பனை நடத்தி வருகின்றனர். பல்வேறு விதமான ஊறுகாய் சுயஉதவிக்குழு மகளிர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்குள்ள டீ, காப்பி எஸ்டேட் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்ற டீ, காப்பித்தூள்களை சுற்றுலாப்பயணிகள் விரும்பி வாங்கி சென்றவாறு உள்ளனர்.