×

ராமநத்தம் அருகே பரபரப்பு பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் 8 பவுன் நகை அபேஸ்-மர்ம நபர்களுக்கு வலை

திட்டக்குடி : கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி அமுதமொழி(29). இவரது கணவர் ராமகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அமுதமொழி தாய் வீடான டி.ஏந்தல் கிராமத்தில் இருந்து வருகிறார். நேற்று மாலை டிப் டாப் உடை அணிந்த 2 மர்ம நபர்கள் ஒரு மொபட்டில் டி.ஏந்தல் கிராமத்தில் பித்தளை பொருட்களுக்கு பாலீஷ் போடுவதாக கூறி வீடு வீடாக சென்றுள்ளனர். அமுதமொழி வீட்டிற்கும் சென்றுள்ளனர். அவரிடம், வீட்டில் உள்ள பித்தளை பொருட்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்தனர்.

அவரும் வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலீஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் தாங்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலீஷ் போடும்போது பளிச்சென்று தெரியவே, அமுதமொழியும் தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் என மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்துள்ளார். அப்போது, அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலீஷ் போட முடியும், என கூறியதால் வெந்நீர் எடுத்துவர வீட்டுக்குள் சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து 8 பவுன் நகையுடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அமுதமொழி வெளியில் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ramanatham Abbes , Thitakkudi: Ramakrishnan's wife Amuthamozhi (29) belongs to Venkanur village near Ramanatham in Cuddalore district. Her husband
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு ஆடம்பர...