திருமலை: திருப்பதி கோயிலில் வரும் 11ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து இலவச டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டுவிட்டது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக, தேவஸ்தானம் சார்பில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டோக்கன்கள் 2 லட்சம் ஆன்லைனில் வழங்கப்பட்டது. மேலும், இலவச டோக்கன்கள் கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் வீதம் வரும் 11ம் தேதி வரை 10 நாட்களுக்கு உண்டான 4.50 லட்சம் டோக்கன்கள் திருப்பதியில் அமைக்கப்பட்ட சிறப்பு கவுன்டர்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்த டோக்கன்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலவச டோக்கன்கள் அனைத்தும் 11ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முற்றிலும் வழங்கப்பட்டு விட்டது. எனவே, இனி திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்படாது. மீண்டும் வழக்கம்போல் 12ம் தேதி முதல் தினந்தோறும் 20,000 பக்தர்களுக்கு என இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.