திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உன்னி காய்ச்சலுக்கு முதியவர் உயிரிழந்தார். திண்டுக்கல் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் அவர் உயிரிழப்புக்கு காய்ச்சல் மட்டுமே காரணம் இல்லை என்றும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மரியநாதபுரம், மேட்டுப்பட்டி, ஆர்.எம்.காலனி, ரவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் உன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் கூறுகையில், ‘‘உடல் வலி, உடல் முழுவதும் சிறிய, சிறிய தடுப்புகளுடன் கூடிய காய்ச்சல்தான் இதன் அறிகுறி.
பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடையத் தேவையில்லை. 15 நாட்கள் மருந்து எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடையலாம். உணவுப் பொருட்கள் மற்றும் உணவு கழிவுகளை கழிவுநீர் கால்வாய், பொது இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும். செடி, கொடிகளை அகற்றி, கொசு மருந்து தெளிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.