×

பொங்கல் பரிசுத்தொகுப்பு திட்டம் நாளை தொடக்கம்: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத்தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், சாதி, மத, பேத மற்றும் நாம் அனைவரும் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்தாண்டுக்கான தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக்கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000, பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான திட்ட செலவுக்காக ரூ.2,429 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், பரிசு தொகுப்புகளை பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த 3ம் தேதியில் இருந்து வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரும்பு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், எந்தவித தாமதமுமின்றி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அதிகாரிகள் திட்டங்களை வகுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் அருகே உள்ள போர் நினைவுசின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளார். அதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உள்ள சர்தார் ஜன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறார். ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த இரண்டு ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இருந்தவை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 50 லட்சத்தை ஒதுக்கினார்.

அந்த 2 புதிய ரேஷன் கடைகளையும் திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க உள்ளார். இதேபோல், மாவட்டம்தோறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் விலைகடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chief of ,Chennai ,G.K. Stalin , Pongal Prize Collection Scheme, Chennai, Chief Minister M.K.Stalin
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...