பூந்தமல்லி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகையில்லா போகி கொண்டாட திருவேற்காடு நகராட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக திருவேற்காடு நகரமன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆணையர் எச்.ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப போகி பண்டிகையை முன்னிட்டு புகை மற்றும் மாசில்லா போகியாக கொண்டாட திருவேற்காடு நகராட்சி அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காற்று மாசுபடுவதை தடுக்கவும், சுற்று சூழலை பாதுகாக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 13ம்தேதி வரை உங்கள் வீடுகளை தேடி வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம், போகியன்று எரிப்பதற்கு வீட்டில் வைத்துள்ள உபயோகமற்ற துணிகள், டயர்கள், தென்னை மட்டைகள், கொட்டாங்குச்சிகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும், புகையில்லா போகியை கொண்டாடி சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.