×

லக்காபுரம் ரிங் ரோட்டில் ரூ.6.60 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரம்

மொடக்குறிச்சி:  மொடக்குறிச்சி அருகே ரிங் ரோடு ரூ.6 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்துவதற்கான விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லாமல் ரிங் ரோடு வழியாக செல்வதற்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெருந்துறை ரோடு, திண்டல் அடுத்த வேப்பம்பாளையத்தில் தொடங்கி சென்னிமலை ரோடு ரங்கம்பாளையம், பூந்துறை ரோடு ஆனைக்கல்பாளையம், முத்தூர் ரோடு லக்காபுரம், கரூர் ரோடு வழியாக கொக்கராயன் பேட்டை வழியாக திருச்செங்கோடு ரோட்டில் இணைக்கும் புறவழிச்சாலை ரிங்ரோடு அமைக்கப்பட்டது. இதில் ஆனைக்கல்பாளையத்தில் இருந்து திண்டல் செல்லும் ரோட்டில் ரிங் ரோட்டிற்காக நிலம் எடுத்து இழப்பீடு வழங்குவதில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்ததால் ஒரு பகுதி மட்டும் இணைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு அந்த பணிகளை முடித்து இணைக்கப்படாத சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் இணைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனையடுத்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய கனரக வாகனங்கள் ரிங் ரோடு வழியாக நகருக்குள் செல்லாமல் திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறது. அதே போல் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகனங்கள்  நகருக்குள் செல்லாமல் ரிங்ரோடு வழியாகவும் சென்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டம்- நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து ரிங்ரோடு வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில் ரிங்ரோடு அமைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சாலையை சீரமைக்கவும் மேலும் சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதால் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது ரிங்ரோடு வழியாக அதிகளவில் போக்குவரத்து இருக்கும். இதனால் கரூர் ரோட்டில் இருந்து முத்தூர் ரோட்டில் உள்ள லக்காபுரம் ரிங் ரோடு வரை உள்ள சாலை இரு வழிச்சாலையாக போடப்பட்டு இருந்ததை போக்குவரத்து அதிகரித்த காரணத்தால் சாலை விரிவாக்கம் செய்யும் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.6 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கரூர் சாலையிலிருந்து சாலையின் இருபுறமும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகலப்படுத்தி தற்போது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து நெரிசலாகவும் சாலையின் இரு புறமும் எதிரெதிரே வரும் வாகனங்கள் முந்தி செல்ல முடியாதபடி இருந்த சாலையை பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணி செய்யப்பட்டு வருகிறது.  ஏற்கனவே லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு வரை மூன்று வழி சாலையாக உள்ளது. அதேபோல் திண்டல் ரிங் ரோட்டில் இருந்து சென்னிமலை ரோடு வரை இருவழிச் சாலையாக உள்ளது. லக்காபுரம் ரிங் ரோடு பணிகள் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் லக்காபுரம் ரிங் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோடு வரை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Lakkapuram Ring Road , 6.60 Crore Lakkapuram Ring Road 4-laning work in progress
× RELATED திருவாரூர் அருகே காரும், பைக்கும்...