வடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி 2 நாள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நெய்வேலி அருகே வானதிராயபுரம் கிராமத்தில் நேற்று பிரசாரத்தை துவங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித்தரக் கூடிய வளமான நிலங்களை பறித்து விட்டு, அவற்றின் உரிமையாளர்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்க என்எல்சி நிறுவனம் துடிப்பதை அனுமதிக்க முடியாது.
25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும்.
கோவையில் 1500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முற்பட்டபோது போராடிய பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெய்வேலியில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் போது ஏன் இது வரை குரல் கொடுக்கவில்லை, என்றார்.