சென்னை: ‘மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை, தேனாம்பேட்டை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் தற்காலிக செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக, சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவ துறை அதிகாரிகள் ஷில்பா பிரபாகர் சதிஷ், உமா, கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், செல்வவிநாயகம், ஹரிசுந்தரி, மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய சுகாதார குழும நிதி ஆதாரத்தின் கீழ், டிஹெச்எஸ் மூலம் இந்த பணிநியமனங்கள் மிகப்பெரிய பணி பாதுகாப்பு இருக்கும் என்கின்ற அளவில் சொல்லப்பட்டது. நேற்று அவர்களின் சங்க நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறோம். தங்களுக்கு புதிய நியமனம்படி பணி நியமனம் வேண்டாம் பழையபடியே தொடர வேண்டும் என்று பிடிவாதமாக கூறுகின்றனர்.
அவர்கள் நேரடியாக தமிழ்நாடு அரசு நிதி ஆதாரத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களிடத்தில் மற்றொரு யோசனையாக எம்ஆர்பி மூலம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது விண்ணப்பம் செய்யுங்கள், அதிலும் உங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.