×

ரூ.48 கோடி செம்மரக் கட்டை பறிமுதல்: சசிகலா உறவினர் கைது: வருவாய் புலனாய்வுத் துறை அதிரடி

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் கட்டை பாஸ்கர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டிவியின் நிர்வாகியாக உள்ளார். சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களையும் நிர்வாகம் செய்து வந்தார். இவருக்கும், அண்ணாநகரில் வசித்து வந்த செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி பாஸ்கர் என்பவரது மகள் டாக்டர் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடந்தது.

போயஸ்கார்டனில் இளவரசி மற்றும் விவேக் வசித்து வந்தாலும், கட்டை பாஸ்கரின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், அந்த திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராகவும் இருந்தார். ஜெயலலிதா எதிர்ப்பையும் மீறித்தான் விவேக், கீர்த்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், கட்ைட பாஸ்கரின் பர்னிச்சர் கடையில் செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் நேற்று அதிரடியாக பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து கட்டை பாஸ்கரை, அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த செம்மரக்கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று அவரிடம் விசாரிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கட்டை பாஸ்கர், சிறிய, சிறிய கடத்தலில் ஆரம்பத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் செம்மரக்கட்டை கடத்தலிலும், சந்தனமரக்கடத்தலிலும் ஈடுபட்டு வந்தார். இந்த கடத்தல் தொழிலுக்காகவே பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.

இந்த கடையின் பெயரில் கடத்தலில் ஈடுபட்டார். இவர் மீது ஏற்கனவே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உள்ளது. இந்த கடத்தலுக்கு அவரது தம்பி சிட்டி ராஜாவும் உடந்தையாகவும் இருந்தார். இதனால் போலீசார் அவரையும் 2018ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் கட்டை பாஸ்கர் மட்டுமே கடத்தலில் ஈடுபட்டு வந்தார். செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதால், அவரை கட்டை பாஸ்கர் என்று போலீசார் அழைத்தனர்.

 கடந்த 10 ஆண்டுகளாக செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தாலும், சசிகலாவின் உறவினர் என்பதால் அவரை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போலீசார் கைது செய்யாமல் இருந்து வந்தனர். தற்போது மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர் செம்மரக்கட்டை கடத்தலில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sasikala ,Revenue Investigation Department , Rs 48 Crore Sheep Shed Seized: Sasikala's Relative Arrested: Revenue Intelligence Department Action
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!