×

ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலி: கோவையில் 39 பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

கோவை: நீலகிரி மாவட்டம் குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறது. இதே போல், முதுமலைப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன. இறந்த காட்டுப்பன்றிகளை ஆய்வு செய்ததில், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் காரணமாக பன்றிகள் உயிரிழந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, பன்றிகளை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, கோவை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 39 இடங்களில் உள்ள பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக, பன்றிகளின் எச்சங்கள், கழிவுகள் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 39 பன்றி பண்ணைகள் உள்ளன. இதில், 3 ஆயிரத்து 687 பன்றிகள் உள்ளன.

தற்போது வரை எந்த பன்றிகளுக்கும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவாது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டால் பன்றிகள் உயிரிழக்க நேரிடும். தற்போது, பண்ணைகளில் ஆய்வு செய்யப்பட்டு மாதிரிகள் சேரிகரிக்கப்பட்டு உள்ளன. பன்றிகள் திடீர் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Cova , African swine fever echo: Officials raid 39 farms in Coimbatore
× RELATED சென்னை காவல் நிலையத்தில் குண்டு வைத்த...