கோவை: கோவை கனுவாய் குடியிருப்பு பகுதியில் வீதி உலா வந்த ஒற்றை காட்டுயானை பொதுமக்களை துரத்தியதால் அவர்கள் அலறியடித்து ஓடினர். பெரிய தடாகம் வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளனர். இதன் அருகே உள்ள மருதமலை வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியேறிய காட்டு யானை ஒன்று
சாலையை கடந்து கனுவாய் குடியிருப்பு பகுதிகுள் நுழைந்தது.
பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டு அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. இந்த நிலையில் அங்குள்ள பிரதான சாலையில் நடந்து சென்ற யானை அவ்வழியாக செல்வோரை மிரட்டியதால் மக்கள் அலறியடித்து ஓடினர். யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.