சென்னை: சென்னை, மாநகர பேருந்தில் கோடம்பாக்கம் லிபர்ட்டி, அருகே பயணித்த நபர் ஒருவர் கத்தியுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது சமீபத்தில் நடந்த சம்பவம் போல் பதிவிட்டாலும், கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என தெரியவந்தது. ஆனாலும் கோடம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ குறித்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (20) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஆபத்தான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஸ்டீபன் ராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 3 கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் வரும் நாட்களில் பேருந்திலோ, ரயிலிலோ கொண்டாட்டம் என்ற பெயரில் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டபூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் முக்கியமான வழித்தடத்தில் பேருந்து நிறுத்தம், மற்றும் கல்லூரிகள் அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.