சென்னை: வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற சென்னை கல்லூரி மாணவனை வெட்டி கொலை செய்த வழக்கில், திண்டிவனம் நீதிமன்றத்தில் இளைஞர் சரணடைந்தார். வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு விஷூவல் கம்யூனிகேஷன் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றபோது, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கைப்பாணிக்குப்பம் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து வெண்ணாங்குபட்டு சோதனைச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் கொலையாளிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. வாகன பதிவெண் அடிப்படையில், கொலையாளிகளை கோட்டக்குப்பம் டிஎஸ்பி மித்ரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மதுராந்தகம் அருகே தர்மாபுரி பகுதியைச் சேர்ந்த சேதுராமன் (23), என்பவர் இவ்வழக்கு தொடர்பாக திண்டிவனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மாலதி முன்பு சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.