சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜைன் சமூகத்தினரின் வழிபாட்டு தலத்தை சுற்றுலா மையமாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஜைன சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சமத் ஹிகர்ஜி என்ற ஜைன சமூகத்தினரின் புனித வழிபாட்டு தலத்தை, சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, மும்பை, போபால், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜைனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை முதல் ராஜரத்தினம் மைதானம் வரை ஜைன சமூகத்தினர் கண்டன ஊர்வலம் சென்றனர்.
சுற்றுலா மையமாக மாற்றும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தற்காலிகமாக நிறுத்தி இருந்தாலும் இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் எந்த அரசும் ஈடுபடக்கூடாது என்பதை கண்டித்து ஊர்வலமாக சென்றனர். தங்களது புனித வழிபாட்டு தலத்தை, சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் மதுபானம், மாமிச உணவுகள் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டு புனிதம் பாழ்படும் சூழல் உருவாகும் என்ற அச்சத்தில் ஜைனர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.