தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்து கட்டிடக் கலையையும் சுவாமியையும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்தை (நாளை) முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு பொடி,பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது, முன்னதாக நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி வீதி உலா நடைபெற்று சுவாமி கோவிலுக்கு வந்தடைந்து பின்னர் அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.