சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22 ம் கல்வியாண்டுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இதுவரை அந்த பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை. பொறியியல் பட்டம் பெற்றவர்கள், பிற படிப்புகளில் பட்ட மேற்படிப்பை படித்தவர்களின் இலக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் உயர்கல்வி/ வேலைவாய்ப்பு அல்லது இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பதாகவே உள்ளது. அதற்கு நிலையான பட்டச்சான்றிதழ் தேவை. அது இன்னும் வழங்கப்படாததால் ஏராளமான மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் கை நழுவும் ஆபத்து உள்ளது.
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆளுனர் மாளிகையில் இருந்து இன்னும் அனுமதி அளிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்களை விரைந்து நடத்துவதற்கு ஆளுனர் மாளிகை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்களின் நலன்களை காக்க வேண்டும்.