சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தரை நியமனம் செய்ய 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நியமித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் இருந்தார். அவரின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய துணை வேந்தர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
இதையடுத்து, புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் நியமித்துள்ளார். அதன்படி, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் (ஓய்வு), தமிழக அரசு பரிந்துரை மற்றும் தேடுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். செனட் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட நியமனதாரராக டாக்டர் வசந்தி வித்யாசாகரன், நிர்வாக குழு நியமனதாரராக டாக்டர், கே.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட இந்த 3 பேர் கொண்ட குழுவினர் புதிய துணை வேந்தர் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த பதவிக்குரிய தகுதியுள்ள நபரை தேர்வு செய்வார்கள்.