×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐஐடி, தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டம்: கலெக்டர் அமிர்தஜோதி தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மற்றும் தாட்கோ நிறுவனம்  இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது, என சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி உலகிலேயே முதல் முறையாக  இளங்கலை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். ஜனவரி 2023ம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 8ம் தேதியாகும். www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி, சென்னை மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவையில்லை. 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தமாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி, மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும் இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன மற்றும் மாணவர்களுக்கு  ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்து கொண்டே ஐ.ஐ.டி, சென்னை வழங்கும் Bachelor of Science in Data Science& Applications பட்டப்படிப்பையும் படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணக்கர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான தகுதிகள் 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணாக்கர்களாக இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தங்களது 12ம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60%க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில்  60% க்கு மேல் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

தாட்கோவில் பதிவு செய்த மாணாக்கர்கள் சென்னை ஐஐடி, நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.1500 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். சென்னை ஐ.ஐ.டி, நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் சென்னை ஐ.ஐ.டி, வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். இப்படிப்பு பயில்வதற்கான செலவினை தாட்கோ கல்விகடன் மூலம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும். மேலும் விவரங்களுக்கு 044-25246344 மற்றும் 9445029456 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IIT ,Chennai ,Adi Dravidian ,Amritajyothi , IIT Chennai, TADCO Joint Career Pathway Program for Adi Dravidian and Tribal Students: Collector Amritajyothi Information
× RELATED சில்லி பாயின்ட்…