×

முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய இயற்றப்பட்ட கழிவுநீர் அகற்றல் சட்டம் நடைமுறைக்கு வந்தது.!

சென்னை: திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிறக்கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை நிறுத்துதல் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய இயற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டைய தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வர அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டு மக்கள் தொகையில், சுமார் 50 சதவீத மக்கள் நகர்ப்புரத்தில் வசிக்கிறார்கள். இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தொழிலாளர்கள் நுழைவதைத் தடைசெய்து, கழிவுநீர் சுத்தம் மற்றும் பராமரிப்பில் இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தியதோடு, மனிதக் கழிவை மனிதர் நீக்கும் அவலத்தையும், மரணங்களையும் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.

* திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடுகள், கழிவுநீர் மற்றும் இதர கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற வகையில் வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. எனவே, கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்கள் அல்லது பிற வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். அதன்படி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள், சென்னை பெருநகரப்பகுதிகளில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு தகுந்த திருத்தங்கள் 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

* மலக்கசடு மற்றும் கசடு கழிவு மேலாண்மை தேசியக் கொள்கையின்படி, உள்ளாட்சி அமைப்புகளில் முழு அளவிலான சுகாதாரத்தை வழங்குவதற்காக, கழிவுநீர் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை, வாகனங்கள் மூலம் அகற்றி, சுத்திகரித்தல், வெளியேற்றல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான விரிவான திட்டம் தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ளன.

* இந்நோக்கங்களுக்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஆகியவற்றிற்கான சட்டங்களைத் திருத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான உரிய வழிமுறைகளை உருவாக்கி அதன் தொடர்ச்சியாக புதிய விதிகளையும் உருவாக்கி 01.01.2023 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இச்சட்டம் மற்றும் விதிகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

(1)    மலக்கசடு மற்றும் கழிவு நீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2000/- ஆகும்.

(2)    மேலும், உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மலக்கசடு மற்றும் கழிவுகளை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது இச்சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

(3)    உரிய உரிமம் பெற்றவர்கள், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நேரம், வழி ஆகியவற்றை பின்பற்றி, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

(4)     உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, புவியிடம் காட்டும் அமைப்பு (GPS) பொருத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதுடன், அக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவை அனுப்புவதையும் உறுதிசெய்ய இவ்விதிமுறைகள் வழி செய்கிறது.

(5)    உரிமம் பெற்ற வாகனங்கள் கசடுகளை அப்புறப்படுத்தும் வசதியினை ஒரு முறை பயன்படுத்துவதற்கு 6000 லிட்டர் வரைக்கும் 200/- ரூபாயும் 6000 லிட்டருக்கு மேற்பட்ட இனங்களுக்கு 300/- ரூபாயும் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

(6)    கழிவுகளை அகற்றும் செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதைத் தடை செய்ய வழிமுறைகள் உள்ளதுடன், உரிமதாரர்கள் தவறு செய்தால் புகார்களை பதிவு செய்வதற்கான வழிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது.

(7)    இந்தச் சட்டம் மற்றும் உரிமத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றத்திற்கு 25,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். அதன்பின்பு, இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு 50,000/- ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

(8)    மேலும் தொடர் குற்றங்களைச் செய்தால் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்வதுடன், குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

(9)    மேற்படி நடவடிக்கைகளுக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

(10)    மலக்கசடுகள், கழிவுநீர், இதன் தொடர்புடைய இதர கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் ஏற்ப விரிவான செய்முறை வழிகாட்டு நெறிமுறைகள் (Operative Guidelines) உருவாக்கப்பட்டுள்ளது.

(11)    நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக நடைமுறைப்படுத்த துணை விதிகளை (bye-laws) உருவாக்கிட மாதிரி துணை விதிகளும் வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டவிதிகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளிகளில் மலக்கசடுகள், கழிவுநீர் போன்றவற்றை வாகனங்கள் மூலம் கொட்டுதல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.

Tags : The Sewage Disposal Act was enacted to ensure proper treatment.!
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...