×

மாரடைப்பால் மரணம் அடைந்த திருமகன் ஈவெரா எம்எல்ஏ உடல் தகனம்: தலைவர்கள், கட்சியினர் அஞ்சலி

ஈரோடு: மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம், ஈரோடு மின்மயானத்தில் இன்று மதியம் நடந்தது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா (46). இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.

கடந்த ஒரு வாரகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், உடல்நிலை சரியானதை தொடர்ந்து ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தனது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி வந்தார். வீட்டில் இருந்த திருமகன் ஈவெராவுக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, கட்சி நிர்வாகிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். இதனால், அதிர்ந்துபோன கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கதறி துடித்தனர். குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். துயர செய்தி கேட்டு அவர்களும், கதறினர்.

இதன்பின்னர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர். திருமகன் ஈவெரா மரணத்தின்போது, அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் இருந்தார். மகன் இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் கதறித் துடித்த அவர், உடனடியாக ஈரோடு விரைந்தார். தனது மகன் உடலை கட்டியணைத்து கதறி அழுதார். தாயார் வரலட்சுமி இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கதறி அழுதனர். இது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்த துயர செய்தி பற்றி தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இரங்கல் செய்தி வெளியிட்டார். அத்துடன், நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தடைந்தார். திருமகன் ஈவெராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஈவெராவின் தந்தையும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, சு.முத்துசாமி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, எம்எல்ஏக்கள் செங்கோட்டையன், சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திருமகன் ஈவெராவின் உடல் இன்று மதியம் ஈரோடு ஆத்மா மின் மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Trumakhan Ivera , Triumagan Evera MLA who died of heart attack Cremation: Leaders, party members pay tribute
× RELATED ஈரோட்டில் மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ....