திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. டெண்டர் நிராகரிக்கப்பட்ட ஏலக்காய் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் என்பவர், கொள்முதல் செய்த ஏலக்காயின் தரம் பற்றி ஐயம் எழுப்பி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரவணை பாயாசத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் அரவணை பாயாசம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அச்சமயம் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது ஆய்வில் தெரியவந்தது.
தொடர்ந்து திருவனந்தபுரம் ஆய்வகத்தின் அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தின் தேசவம் போர்டு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததால் கூடுதலாக அரவணை பாயாசம் தேவைப்பட்டது. எனவே அரவணை பாயாசத்தில் பயன்படுத்துவதற்கான ஏலக்காயை உள்ளூர் சந்தையிலேயே தேவசம் போர்டு கொள்முதல் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக வரப்பெற்றிருந்த ஏலக்காய் டெண்டர் விண்ணப்பங்களை தேவசம் போர்டு நிராகரித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.