×

காவேரிப்பட்டணம் அருகே 300 வருடங்களுக்கு முந்தைய ஊர்தலைவன் நடுகல் கண்டுபிடிப்பு: உடன்கட்டை ஏறிய 2 மனைவிகள் காட்சிபடுத்தல்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே 300 வருடங்களுக்கு முந்தைய ஊர் தலைவன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், காவேரிப்பட்டணம் அடுத்த அகரம் அருகே உள்ள குடிமேனஹள்ளி பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 300 வருடங்களுக்கு முந்தைய ஊர்தலைவன் நடுகல்லை அவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இங்குள்ள வீரக்காரர் கோயிலில், 2 நடுகற்களை வைத்து வழிபட்டு வருவது தெரியவந்தது. இந்த இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல், குடிமேனஹள்ளி பகுதியைச்சேர்ந்த, ஒரு ஊர்தலைவனுடையது என்பது தெரிய வந்தது.

இவை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கு நடைபெற்ற பூசலில், ஊரைக் காக்க இவன் கொல்லப்பட்டதால் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் தலைவன் என்பதை குறிக்கும் வகையில், அவன் குதிரை மீது அமர்ந்திருக்கிறான். அவன் கையில் 2 வாள்கள் உள்ளன. அவன் இறந்தபோது அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனுடைய இரண்டு மனைவியரும், அந்த நடுகலில் காட்டப்பட்டுள்ளனர். அந்த குதிரையை வழிநடத்தி செல்லும் சேவகனும் காட்டப்பட்டுள்ளான். அதே போல், அவன் தலைவன் என்பதை குறிக்கும் வகையில், ஒருவன் அதற்குரிய கண்ணாடி சின்னத்தை எடுத்து வருகிறார். இந்த நடுகல்லானது கோயிலின் கருவறையில் வைத்து வணங்கப்படுகிறது.

இந்த நடுகல்லில் உள்ள சிற்ப அமைப்பு, அப்படியே கோயிலின் மேற்பகுதியிலும் சிமெண்ட்டால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இக்கோயில் விழாக்களின் போது, 5 பானைகள் எடுத்து வரப்படுகின்றன. அவை குடிமேனஅள்ளி, நாகரசம்பட்டி, மல்லிக்கல், கொண்ரம்பட்டி, கொங்கரப்பட்டியைச் சேர்ந்தவையாகும். கரகம் நாகரசம்பட்டியில் இருந்தும், பூசைக்கூடை குடிமேனஅள்ளியில் இருந்தும், மற்றொரு கரகம் ஆற்றங்கரையோரம் பாக்காத்தியம்மா கோயிலில் இருந்தும் எடுத்து வரப்படுகிறது. 5 வருடங்களுக்கு ஒருமுறை விழா சிறப்பாக கொண்டாடப்படுவதாக தர்மகர்த்தா பொன்னுசாமி தெரிவித்தார்.

இந்த ஊரில் பெருமாள் என்பவரது நிலத்திலும், 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று வீரர்கள் உடைய நடுகல் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த கள ஆய்வின்போது, குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, சதானந்தகிருஷ்ணகுமார், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி மற்றும் பூசாரி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Kaveripatnam , 300-year-old Urthalaivan Nadu stone found near Kaveripatnam: 2 consorts displayed together
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...