×

பொன்னேரி அருகே சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைப்பு

புழல்: பொன்னேரி அருகே சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை உடனடியாக சீரமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில், அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு அம்பேத்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சுற்றி பாதுகாப்பு வேலியும்  அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அம்பேத்கரின் சிலையில் முகத்தை சிதைத்தும் கையை சேதப்படுத்தியும் தோள்பட்டையுடன் இணையும் பகுதியில் கை விரிசலுடன் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சோழவரம் போலீசார் சென்று விசாரித்தனர். பின்னர் துணியை கொண்டு சிலையை மூடினர். இதன்பிறகு கிராமத்தை சேர்ந்த உதயா, அரவிந்தன், தவசி, சவுந்தரராஜன், தென்னவன், மணிகன்டன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். ‘’மதுபோதையில் சிலையை சேதப்படுத்திவிட்டோம்’ என்று போலீசார் விசாரணையில் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் நேற்றிரவு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக தலைமறைவாக உள்ள சதாசிவம், ராஜேஷ் ஆகிய இருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு காவல்துறையினர், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Ambedkar ,Ponneri , Restoration of damaged Ambedkar statue near Ponneri
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...