மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஆயுதங்களுடன் சிறைக்குள் நுழைந்த மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியானார்கள். மேலும் 24 கைதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றனர். வடக்கு மெக்சிகோவின் சியூடாட் ஜூவாரெஸ் பகுதியில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அமெரிக்காவுடனான மெக்சிகோ எல்லையில் இந்த சிறைச்சாலை உள்ளது. சிறை கைதிகளை பார்ப்பதற்காக குடும்பத்தினர், உறவினர் என ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் ஆயுதமேந்திய மர்மநபர்கள் வாகனங்களில் திடீரென சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 10 சிறை காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தினால் சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி 24 கைதிகள் சிறையில் இருந்து தப்பி சென்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறையை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு முன்னதாக போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்து அதில் இருந்த 4 பேரை கைது செய்தனர்.