சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடுத்தபடியாக நாட்டில் மிகவும் அதிகாரம் வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையத்தின் துணை தலைவரும், கட்சியின் மத்திய குழு செயலாளருமான பாக் ஜாங் சோன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரி யோங் கில் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ அதிகாரி மாற்றம் செய்ததற்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
புத்தாண்டு தினத்தன்று அதிபர் கிம், தனது தந்தை மற்றும் தாத்தாவின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கும்சூசன் அரண்மனைக்கு சென்றார். இது தொடர்பாக வௌியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்திலும் ராணுவ அதிகாரி பாக் ஜாங் சோன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.