சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில், பல்வேறு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி நேற்று முன்தினம் (1ம் தேதி) முதல் 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், தாஸ், அன்பரசு, செல்வம், குமார், சங்கரபெருமாள், சேகர், முத்துசாமி, சண்முகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன், பொதுச்செயலாளர் தண்டபாணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமை செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம் மற்றும் கணேசன், பொதுச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்தனர். இதையடுத்து நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.