×

 பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்குவது எப்போது? அமைச்சர் சிவசங்கர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள்  இயக்கம் மற்றும் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்  இன்று ஆலோசனை நடத்துகிறார். பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் 16ம் தேதியும், காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் 17ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் மட்டுமே அரசு  விடுமுறை நாட்களாக இருக்கிறது தொடர் விடுமுறை நாட்கள் குறைந்துள்ளது.

அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் 4 மாதங்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்துவிட்டனர். வழக்கமாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளை நம்பி தான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த மாதம் 12ம் தேதி முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிரம்பிவிட்டன. பேருந்துகள், ரயில்களில் இடங்கள் நிரம்பியதால் பலர் 12ம் தேதி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு தற்போது 12ம் தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் போக்குவரத்துத்துறை செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

Tags : Pongal ,Minister ,Sivashankar , When will Pongal special buses run? Minister Sivashankar in consultation with officials today
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...