சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் வரி வசூல் செய்வதற்கு என தனி பிரிவு இயங்கி வருகிறது. இப் பணியில் வருவாய் உதவியாளர்கள் சேதுராஜன், முருகபாண்டியன் ஆகியோர் கடந்த 3 வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து பெற்ற வரி பணத்தை நகராட்சி பொது நிதியில் செலுத்தாமல், தாங்களே செலவு செய்ததாக 2 பேர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்தது. கடந்த 28ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள், வரி வசூல் செய்பவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர். விசாரணையில் வரிவசூல் செய்த பணத்தில் ரூ.2 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சேதுராஜன், முருகபாண்டியன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி ஆணையர் வாசுதேவன் உத்தரவிட்டார்.