சான்பிரான்சிஸ்கோ: அலுவலக வாடகை தராத டிவிட்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிவிட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற உடனே பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் உள்பட பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். அதுமட்டுமில்லாமல் புளூ டிக் வேண்டுமென்றால் அதற்கு சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.
அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் கொலம்பியா ரெய்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் டிவிட்டர் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை என தெரிகிறது. இதனால் கொலம்பியா ரெய்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் 16ம் தேதி டிவிட்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் வாடகைத் தொகை 1 கோடி 12 லட்சத்து 74 ஆயிரத்து 687 ரூபாயை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் வாடகையை டிவிட்டர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக டிவிட்டருக்கு எதிராக கொலம்பியா ரெய்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ அலுவலகம் தவிர பிற இடங்களிலும் அலுவலக வாடகையை இந்நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இரண்டு ஒப்பந்த விமானங்களுக்கான கட்டணத்தையும் செலுத்தவில்லை எனக் கூறி விமான நிறுவனமும் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து டிவிட்டர் பதில் அளிக்கவில்லை.